போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை – அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் கொலம்பியா
போதைப் பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கையில் கைக்கோர்க்க கொலம்பியா அரசாங்கம் முன்வந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் நேற்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் கொலம்பியாவுடன் இணையுமாறு பென்டகனிடம் பொகோட்டா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத மற்றும் தீவிரவாத வலையமைப்புகளை அழிப்பதற்கான கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்குமாறும் பொகோட்டா கேட்டுக்கொண்டுள்ளது,” என்று பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தீவிரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகள், எங்கள் கூட்டாளிகளிடமிருந்து நாங்கள் காண விரும்பும், முனைப்பான பங்கேற்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பரில், அமெரிக்க இராணுவம் கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறப்படும் படகுகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இதில் இதுவரை குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




