இங்கிலாந்தில் கல்வி விசா மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி விசாக்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ள நிலையில், அந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.
டங்கன் லூயிஸ் என்ற சட்ட நிறுவனத்தின் ஆதரவுடன் மூன்று சூடான் பெண்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
அத்துடன் குறித்த வழக்கு அடுத்த வாரத் தொடக்கத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
கல்வி விசாக்களை பயன்படுத்தி இங்கிலாந்திற்குள் நுழையும் சிலர் பின்னர் அங்கு புகலிடம் கோருவதாக கூறி கடந்த மார்ச் மாதம் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த தடையை கொண்டுவந்திருந்தார்.
இதனை எதிர்தே வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர்களான இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு மருந்தாளர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர்.
உள்துறை அமைச்சகம் நாடுகளைத் தேர்ந்தெடுத்த விதம் குறைபாடுடையது என்றும், பரவலான விசா முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சூடான் மருத்துவர், தனது தேசியம் காரணமாக, குடிவரவு முறையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடியவராகக் கருதப்படுவது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
போரினால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இளம் சூடானியர்களுக்குக் கல்வி மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.




