அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகில் கனடாவும், ஐரோப்பாவும் ஒன்றிணைய வேண்டும்
அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகில், தங்கள் சந்தைகள், ஜனநாயகங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க கனடாவும் ஐரோப்பாவும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கனடாவை “இணை உறுப்பினராக” (associate member) மாற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவு வெளியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இடையிலான உறவுக்கு ஒரு புதிய அந்தஸ்தை உருவாக்கும் வகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்வைத்த திட்டத்திற்குப் பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்த்தக தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்தே மார்க் கார்னி இவ்வாறு கருத்துரைத்தார் . அவரின் உரைக்கு பலத்த கைத்தட்டலும் வரவேற்பும் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாக வலிமையானவை. ஆனால், அவை ஒன்றிணையும்போது இன்னும் அதிக வலிமை பெறுகின்றன,” எனக் கூறிய கார்னி, வொஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கிற்கு “சிறந்த நற்பண்புகளுடன் கூடிய ஒரு பெரும் சக்திவாய்ந்த போட்டியாளராக” செயல்படக்கூடிய “மூன்றாவது அணியை” உருவாக்க தான் முயற்சிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
“மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தை நாங்கள் நாடவில்லை. மாறாக, நாங்கள் மீள்தன்மையையே (resilience) நாடுகிறோம்; இதன் மூலம் யாரும் எங்கள் திறந்த சந்தைகளைக் கட்டுப்படுத்தவோ, எங்கள் இறையாண்மையைப் பாதிக்கவோ, எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கவோ அல்லது எங்கள் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைச் சிதைக்கவோ முடியாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




