வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டமூலம் அறிமுகம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இதனடிப்படையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ஆம் நாளான இன்று (ஜூலை 27), பொதுத் தேர்வு (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த சட்டமூலம் 2026-ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
:
அவை நடவடிக்கைகள் தொடங்கியது முதல், நீட் விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறை தடியடியைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவையின் கண்ணியத்தைக் காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்த போதிலும் அமளி நீடித்ததால், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு:
“வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்குக் கடுமையான மற்றும் காலக்கெடுவுக்குள் தண்டனை வழங்குவதை உறுதி செய்யும் புரட்சிகரமான சட்டமூலம் இதுவாகும்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியைக் கைவிட்டு நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதத்தில் பங்கேற்க வேண்டும். “- என்று குறிப்பிட்டார்.
தற்போது வரைவு செய்யப்பட்டுள்ள இப்புதிய சட்டமூலம், ஏற்கனவே நடைமுறையிலுள்ள ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) சட்டம் 2024’-இல் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.




