தவெகவுக்கு ஆதரவு இல்லை: அதிமுக திட்டவட்டம்! தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!!
தவெக ஆட்சியமைப்பதற்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில், அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
அதில், ”தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்றால், அதிமுக அழிவுப் பாதைக்கு சென்றுவிடும்.
வெளியில் இருந்து ஆதரவு அளித்தால், தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டியது தானே என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும்.
அதனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை” என்று முடிவெடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ”தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
அதேவேளை, அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் பரிசீலித்துவருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.





