ஈரான், ஓமான் ஒப்பந்தம் – ஹோர்மூஸ் ஜலசந்தியை மீளவும் திறக்கக்கூடும் : நம்பிக்கையில் அமெரிக்கா
ஈரான் மற்றும் ஓமான் விரைவில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்றும், அது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் 05 மாதமாக தடைபட்ட எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா நம்புவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஜலசந்தி விவகாரத்தில் ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, விரைவில் ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை தடையின்றி மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடன், ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை அமெரிக்கா நீக்கும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் “செயல்திறன் அடிப்படையிலானதாக” இருக்கும் என்றும், ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தே அவை அமையும் என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியின் கட்டுப்பாடு குறித்த ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம், ஒரு பரந்த அமைதி உடன்படிக்கைக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான விதிமுறைகளை வகுத்த அந்த ஜூன் 17 புரிந்துணர்வு ஒப்பந்தம், குறுகிய காலமே நீடித்தது. ஜூலை 7 அன்று மோதல்கள் மீண்டும் தொடங்கி, பின்னர் மீண்டும் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




