இளைஞர் புரட்சியின்போது பின்வாங்கியது ஏன்? நாமல் விளக்கம்
படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
“அரகலய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அக்காலப்பகுதியில் இளைஞர்கள் மீது கோட்டாபய ராஜபக்ச எவ்வித வன்முறையையும் ஏவவில்லை.
இளைஞர்களின் போராட்டங்களை இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் எவ்வாறு கையாண்டன என்பதை நாம் பார்த்தோம்.
ஆனால், நாங்கள் ஓரடி பின்வாங்கினோம். இளைஞர்களைக் கொன்றுவிட்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள நாங்கள் முற்படவில்லை. இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகவோ அல்லது இயலாமையாகவோ கருதிவிட வேண்டாம்.
படையினரைக் களமிறக்கி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எம்மால் முடிந்திருக்கும்; ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்களின் பக்கம் நின்று ஓரடி பின்வாங்கினோம்.” – என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.




