மக்களின் வரிப்பணத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க தயாராகும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க வரி செலுத்துவோர் பணத்தில் நிதியளிக்கப்பட்ட இந்தத் தொகுப்பில், மேற்கத்திய ஆயுதக் கிடங்குகளில் உள்ள மிகவும் அழிவுகரமான சில ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவற்றுள் 20,000 MK-84, 20,000 BLU-117 மற்றும் 20,000 I-2000 பெனட்ரேட்டர் போர்க்குண்டுகள் அடங்கும் என்றும் வொஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் இந்த விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது என ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
இதற்கிடையில், “கொள்கையின்படி, முன்மொழியப்பட்ட ஆயுத விற்பனைகள் குறித்து காங்கிரசுக்கு முறையாக அறிவிக்கப்படும் வரை, வெளியுறவுத்துறை அவற்றை உறுதிப்படுத்தவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ செய்யாது” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.




