இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமுலாக்க நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்
நியூஸிலாந்தின் ஏற்றுமதிகளில் சுமார் 95 சதவீதமான பொருட்களுக்கான சுங்கவரிகளை நீக்குவதற்கோ அல்லது கணிசமாகக் குறைப்பதற்கோ வழிவகுக்கும், இந்தியாவுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான சட்டமூலம் நியூஸிலாந்தின் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் (Labour Party) ஆதரவுடன், 93–29 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இந்தச் சட்டமூலம் நிறைவேறியது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்களில் பாதியளவிற்கும் அதிகமானவை, ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நாளிலிருந்தே சுங்கவரி இல்லாத பொருட்களாக மாறும்.
“ஏற்றுமதியாளர்களுக்கு இதனால் ஏற்படும் நன்மைகள் உடனடியானதாகவும் கணிசமானதாகவும் இருக்கும்,” என்று நியூஸிலாந்தின் வர்த்தக அமைச்சர் தொட் மெக்லே (Todd McClay) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“இந்த உயர்தர ஒப்பந்தம் நடப்பாண்டிலேயே அமுலுக்கு வரும் என்றும், நமது பதவிக்காலத்தில் இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வோம் என்ற நமது வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” – எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்கள் அனைத்தும் நியூஸிலாந்திற்குள் சுங்கவரியின்றி நுழைவதற்கான அனுமதி பெறவுள்ளன. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவும் வெலிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது.
இரு நாடுகளும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் முதன்முதலில் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டன.
ஜூன் 2026 வரையிலான ஒரு ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் 3.99 பில்லியன் நியூஸிலாந்து டாலர்களை ($2.29 பில்லியன்) எட்டியுள்ளதுடன், நியூஸிலாந்தின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒன்பதாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியா திகழ்கிறது.
இரு நாடுகளும் தங்களது முறையான ஒப்புதல் நடவடிக்கைகளை நிறைவு செய்த பிறகு, இந்த வர்த்தக ஒப்பந்தம் அமுலுக்கு வரும்.




