இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

அரபிக் கடலில் அத்துமீறல்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

அரபிக் கடலில் அத்துமீறில்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

அரபிக் கடலில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைக்காக” தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ய பாகிஸ்தானின் தூதரக அதிகாரியை (Charge d’Affaires) அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இரு அணுஆயுத வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போரைத் தொடர்ந்து போர்நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே பகிரங்கமான இராணுவப் பதற்றம் ஏற்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவாகும்.

வடக்கு அரபிக் கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய முன்னணிப் போர்க்கப்பலின் அருகே, செவ்வாய்க்கிழமை சர்வதேசக் கடற்பரப்பில் அதிவேகமாக வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்தியத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இராணுவப் பயிற்சிகள் மற்றும் படைகளின் நகர்வுகள் தொடர்பான 1991 ஆம் ஆண்டைய இருதரப்பு ஒப்பந்தத்தை நேரடி மீறும் செயல் என இந்திய வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேசக் கடற்பரப்பில் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, இரு நாடுகளின் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் குறைந்தபட்சம் 3 நாவ்டிகல் மைல் இடைவெளியைப் பேண வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கட்டாயப்படுத்துகிறது.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கமோ அல்லது இராணுவமோ உடனடியாக எவ்விதக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.

“இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும், இருதரப்பு ஒப்பந்த விதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது,” என்று வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்லாமாபாத்திலுள்ள மூத்த இந்தியத் தூதருக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சிடம் இது போன்ற எதிர்ப்பைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளைக் குறைத்துக்கொண்டதால், புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளின் தூதர்கள் நியமிக்கப்படவில்லை. அன்றிலிருந்து இரு நாடுகளின் தூதரகப் பணிகளும் தூதரக அதிகாரிகளினாலேயே (Charge d’Affaires) வழிநடத்தப்பட்டு வருகின்றன.

1947 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று பெரிய போர்களிலும், பல ஆயுதமேந்திய மோதல்களிலும் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி