கருங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்திய துருக்கி
கருங்கடல் பாதையில் துருக்கி கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பாதையில் உக்ரைன், ரஷ்யா தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய எண்ணெய் மற்றும் தானிய ஏற்றுமதி மையமான ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் (Novorossiysk) நோக்கிச் செல்லும் கப்பல்களிடம், கடலோரப் பாதுகாப்பு பொது இயக்குநரகம், தற்போது அத்தகைய பயணங்களுக்குப் போக்குவரத்து அனுமதிகளை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கான எந்த விளக்கத்தையும் அதிகாரிகள் அளிக்கவில்லை என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, கருங்கடலுக்குள் கப்பல்களின் போக்குவரத்தை திறம்பட கட்டுப்படுத்துகிறது.
அங்கு, துருக்கிக்குச் சொந்தமான கப்பல்கள் உட்பட வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், கூடுதல் பாதுகாப்புக்கு அங்காரா அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




