மோதலின் மையப் புள்ளி – யார் கை ஓங்கும்?
ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான செல்வாக்கிற்கான போராட்டம், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதலில் ஒரு மையப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இரு தரப்பினரும் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். ஆனால், சமீபத்திய கப்பல் போக்குவரத்துத் தரவுகள் இந்தச் சமநிலை மாறக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றன.
டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி கப்பல்களைக் கண்காணிக்கும் கடல்சார் பகுப்பாய்வு நிறுவனமான Kpler வெளியிட்டுள்ள கூற்றுப்படி, கடந்த இரண்டு வாரங்களில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல் பயணங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடமான ஓமானி கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தியுள்ளன.
இருப்பினும் ஈரான் அந்த ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்துள்ளதுடன், ஓமானி கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் பயணிக்க முயன்ற டஜன் கணக்கான கப்பல்களைத் தாக்கியுள்ளது.
இந்த அபாயங்கள் இருந்தபோதிலும், அப்பகுதியில் செயல்படும் அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பை நம்பி, பல கப்பல்கள் தொடர்ந்து அந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன.
இதனை வைத்து பார்க்கும்போது “ஈரான் குறைந்தபட்சம் பகுதியளவு ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டது போல் தெரிகிறது,” என்று Kpler குறிப்பிட்டுள்ளது.
ஈரான் விரும்பும் வழித்தடங்களில் போக்குவரத்து குறைந்துள்ளதால், அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து போக்குவரத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தெஹ்ரானின் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு இல்லாமல், ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை ஓமானும் ஈரானும் நடத்துவதால், நிலைமை மேலும் சிக்கலாகலாம்.
அந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு நிச்சயமற்றதாகவே உள்ளது, மேலும் அவை கப்பல் போக்குவரத்து அல்லது அந்த மூலோபாய நீர்வழியின் கட்டுப்பாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.




