NPP அரசின் நேர்மையாலேயே வடக்கு மக்கள் மத்தியில் பேராதரவு
“இனப்பிரச்சினை தொடர்பில் நமக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. உண்மையான வேலைத்திட்டத்துடனேயே வடக்கிற்குச் செல்கிறோம்” என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி, இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்தினார்கள்.
ஆனால், இனப்பிரச்சினை குறித்து நாம் தெளிவாக அறிந்து வைத்துள்ளோம். அண்மையில்கூட நான் வட பகுதிக்குச் சென்று மக்களைச் நேரில் சந்தித்தேன்; அவர்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தேன்.
எமது ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு அமோக வரவேற்பளித்தனர். மக்கள் அவரை மிகுந்த அன்புடன் வரவேற்றனர்.
13-ஆவது திருத்தச் சட்டத்தைத் தருவதாகக் கூறியோ அல்லது சமஷ்டி முறையைத் தருவதாகக் கூறியோ மக்களை ஏமாற்றாமல், எமது உண்மையான வேலைத்திட்டத்துடனேயே அவர்களிடம் செல்கிறோம். எமது இந்த வெளிப்படைத்தன்மைக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்” எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.




