பதவி விலகல் அழுத்ததிற்கு மத்தியில் பணியைத் தொடரும் ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமர் Starmer, தன்னை பதவி விலகுமாறு கோரும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் அதேவேளை பிரதமராக தனது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று அமைச்சர் டேரன் ஜோன்ஸ் (Darren Jones) தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பிரதமர் நேற்றைய தினம் ஆற்றிய உரையில் தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அமைச்சர் டேரன் ஜோன்ஸ் கூறினார்.
மேலும், தொழிற் கட்சிக்குள் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கால தலைமை தொடர்பாக வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
“சில உறுப்பினர்கள் பிரதமரிடம் மாற்று வழிகளைப் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அவர் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார். அவர்களின் பேச்சைக் கேட்காமல் இருப்பது தவறாக இருக்கும்,” என்றும் ஜோன்ஸ் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சியை வழிநடத்துவாரா என்ற கேள்விக்கு நேரடி பதில் அளிக்க அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
“பிரதமர் எடுக்கக்கூடிய அல்லது எடுக்க முடியாத எந்த முடிவையும் நான் முன்கூட்டியே கூறப்போவதில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தாம் பதவி விலகப் போவதில்லை என்பதை ஸ்டார்மர் ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளதாகவும் ஜோன்ஸ் வலியுறுத்தினார்.
தொழிற்கட்சிக்குள் அதிகரித்து வரும் அதிருப்தி மற்றும் தலைமை மாற்றக் கோரிக்கைகள் மத்தியில், ஸ்டார்மர் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.




