இலங்கையை வருமானமுள்ள நாடாக தரம் உயர்த்தியது உலக வங்கி
மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையை, உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உலக வங்கி தரம் உயர்த்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட தனது அண்மைய வருமான வகைப்பாட்டுப் புதுப்பிப்பில், சிறிலங்காவை கீழ்-நடுத்தர வருமானப் பிரிவிலிருந்து தரமுயர்த்தியுள்ளது.
இலங்கையை “மீட்சியின் கதை” என்று விவரித்துள்ள உலக வங்கி, “2022-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், பல்வேறு தொழில்துறைகளில் ஏற்பட்ட மீட்சி மற்றும் நிதி, சுற்றுலா சேவைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், 2025-ல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
நாடு அந்த வரம்பை மிகக் குறைந்த வித்தியாசத்தில் கடந்திருந்தாலும், இந்த மீள் தரமுயர்வு அதன் மீள்திறனின் ஒரு அடையாளமாகும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
உலக வங்கி உயர், உயர் நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் குறைந்த என, நான்கு வகையான நாடுகளின் வருமான வகைப்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்த வகைப்பாடுகள், முந்தைய நிதியாண்டின் தனிநபர் மொத்த தேசிய வருமான மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.
இந்த ஆண்டுப் பதிப்பில் 218 நாடுகள் உள்ளடக்கப்பட்டன, மேலும் இதன் முடிவுகள் ஜூன் 2027 இறுதி வரை உலகளாவிய ஒரு குறிப்பாகப் பயன்படும்.





