ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை – 41 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும்
ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் பரவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரக்கால நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு அவசரக்கால கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், நாடு முழுவதும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வெப்பநிலை சாதனை அளவை நோக்கி உயர்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
2003 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் வெப்ப நிகழ்வுகளுக்கு ஒப்பாக, இந்த வெப்பம் அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு நிறுவனமான மெட்டியோ பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கில் இருந்து பாரிஸ் பகுதி வழியாக பர்கண்டி வரை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை நிலவும் என்றும், சில பகுதிகளில் இது 41 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் திங்கட்கிழமை வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்றும், இது வரலாற்றுச் சாதனை அளவை எட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sebastien Lecornu) இன்று அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதேபோல் ஜெர்மனியிலும் நாடு தழுவிய வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, அங்கு வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் கலவையானது கடுமையான இடியுடன் கூடிய மழையைத் தூண்டக்கூடும் என்று DWD வானிலை சேவை எச்சரித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றம் வெப்ப அலைகளை அடிக்கடி மற்றும் தீவிரமாக்கி வருவதாகவும், இது கோடை மாதங்களில் சுகாதார அவசரநிலைகள் மற்றும் பொருளாதார சீர்குலைவுகளின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.





