“தனிநாடு விவகாரம்” தைவானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
தைவான், சீனாவிடமிருந்து தம்மை தனிநாடாக பிரகடனப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ட்ரம்ப் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
“ யாரும் தங்களைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்துவதை நான் விரும்பவில்லை” என்று ட்ரம்ப் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
தைவான் தன்னை இறையாண்மையுள்ள நாடாகவே கருதுவதால், தாங்கள் தனியாக சுதந்திரப் பிரகடனம் செய்யத் தேவையில்லை என்று தைவான் ஜனாதிபதி லாய் சிங்-தே குறிப்பிட்டுள்ளார்.
தைவானுக்குத் தற்காப்பு உதவிகளை வழங்க அமெரிக்கா கடமைப்பட்டிருந்தாலும், சீனாவுடனான தங்களின் தூதரக உறவையும் சமநிலையில் பேணுவதற்கு வாஷிங்டன் முயற்சித்துவருகின்றது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட தைவான் தீவு குறித்து தான் எந்தவொரு உறுதியையும் அளிக்கவில்லை என்று ட்ரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தைவானைச் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று உரிமை கொண்டாடி வருவதுடன், தேவைப்பட்டால் இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் எனக் கூறி வருகிறது.
இந்நிலையில் “ஒரே சீனா” என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு பீஜிங்குடன் ராஜதந்திர உறவைப் பேணுவதே அமெரிக்காவின் நீண்டகால நிலைப்பாடாகும்.
தைவானின் தற்போதைய ஜனாதிபதி சர்ச்சைக்குரியவர் என்றும், “பிராந்திய அமைதியைக் குலைப்பவர்” என்றும் சீனா தொடர்ந்து விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




