அரசாங்கம் நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை – 500000 ரூபாய் அபராதம்
இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம் ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலி அக்மீமன பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 255 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விடக் அதிகமாக 270 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தினால் அந்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




