ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் முற்றுகை – மக்ரோன் தகவல்
ரஷ்யாவின் நிழல் கப்பல் படையைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்றை பிரெஞ்சு படைகள் இடைமறித்ததாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிசிலி கடற்கரைக்கு அப்பால் “கடல்சார் சட்டத்தை மீறி” பயணித்துக் கொண்டிருந்த “டெலிவர்” என்ற கப்பலை கடற்படை இடைமறித்ததாக கூறியுள்ளார்.
அதேநேரம் படையினர் கப்பலில் ஏறி சோதனையிடுவதைக் காட்டுவதாகத் தோன்றும் காணொளிக் காட்சிகளை மக்ரோன் பகிர்ந்துள்ளார்.
டெலிவர் என்பது கேமரூனியக் கொடியைக் கொண்ட ஒரு கப்பலாகும். இது 2024 முதல் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டு, முக்கியமாக பால்டிக் மற்றும் கருங்கடல் துறைமுகங்களிலிருந்து இயங்கி வருவதாக உக்ரைனின் தலைமை புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்யா தனது எரிசக்தித் துறை மீதான மேற்கத்தியத் தடைகளைத் தவிர்ப்பதற்காக தனது நிழல் கப்பல் படையைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




