நேர்மையான அணுமுறைமூலமே தமிழர்களின் ஆதரவை பெற்றார் ஜனாதிபதி அநுர
13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், அது சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றது.
ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமான வழியிலேயே இடம்பெறுவதால், சில வேளைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும்.
ஜனாதிபதி கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்குள்ள மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். தமிழ் மக்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர்.
13-வது திருத்தத்தைத் தருகின்றோம், சமஷ்டி தருகின்றோம் என்றெல்லாம் கூறி ஜனாதிபதி மக்களின் ஆதரவைப் பெறவில்லை. வடக்கில் ஒரு பேச்சும், தெற்கில் வேறு பேச்சும் அவர் பேசவில்லை. உண்மையின் அடிப்படையில் செயல்படுவதாலும், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையாலுமே மக்கள் அவரை ஆதரிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி, மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஜனாதிபதிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.” – என்றார் பிரதி அமைச்சர்.





