AI ஆல் மனிதக் குலம் அழியவும் வாய்ப்பு – முன்னணி ஆய்வாளர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அது “மனிதகுலம் முழுவதையும் அழித்துவிடும்” அபாயம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக Anthropic நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆய்வாளர் Evan Hubinger, தற்போதுள்ள AI மாதிரிகளால் ஏற்படும் ஆபத்து “குறைவு”தான் என்றாலும், இந்தத் தொழில்நுட்பம் விரைவில் தானாகவே வளர்ந்து மேம்பட்டு, மனிதகுலத்தின் இருத்தலுக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலையை அடையக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “Anthropic நிறுவனம் தனது முழு முயற்சியையும் மேற்கொண்டு வருவதாக நான் நம்புகிறேன்; ஆனால், ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ (superintelligence) எனப்படும் அதீத செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளை மனித விழுமியங்களுடன் ஒருங்கிணைப்பதற்கான (alignment) தீர்வுத் திட்டம் இன்னும் நம்மிடம் இல்லை.
அத்தகைய இலக்கை நோக்கி நாம் சரியான பாதையில் செல்வதாகவும் உறுதியாகச் சொல்ல முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்காலத்தில் AI அமைப்புகள் எவ்வாறு மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை.
தற்போது AI-ஆல் ஆபத்து உள்ளதா இல்லையா என்ற விவாதத்திலிருந்து மாறி, அந்த ஆபத்து எவ்வளவு பெரியது என்பது குறித்த விவாதத்தை நோக்கி உலகம் நகர்ந்து வருவதை அவரது எச்சரிக்கை புலப்படுத்தியுள்ளது.





