AfD கட்சியின் வெற்றிக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் – ட்ரம்ப் கருத்து
ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (AfD), மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்றமைக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெருமளவிலான குடியேற்றம் குறித்த பொதுமக்களின் அதிருப்தியால் வலுப்பெற்ற AfD கட்சி, சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத் தேர்தலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியொன்று அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும்.
சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் முதல்வராக வரவிரும்பும் AfD கட்சியின் உல்ரிச் சீக்மண்ட் Ulrich Siegmund, ட்ரம்பின் கொள்கைகளை போலவே சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் ட்ரூத் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “அற்புதம்! ஜெர்மனியில் உள்ள மக்கள் ஆதரவு பெற்ற கட்சிக்கு (Populist Party) நேற்று மிகச் சிறப்பான இரவு அமைந்தது. ஜெர்மனிக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிகவும் மோசமான குடியேற்ற விதிகள் மற்றும் விதிமுறைகளால் அவர்கள் இறுதியாகச் சோர்வடைந்துவிட்டனர்,” என்று தெரிவித்துள்ளார்.




