அணுவாயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா – அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எச்சரிக்கை
வடகொரியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் பிற நாடுகளில் பணியமர்த்தப்படுவதற்கு எதிராக அமெரிக்காவும் 10 ஆசிய மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளன.
வடகொரிய அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்காக இந்த முறையை கையாள்வதாகவும், இதன்மூலம் பெறப்படும் வருவாய் நாட்டின் அணுவாயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அந்நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், வட கொரியாவின் சட்டவிரோத அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக” அந்நாடு திறமையான தொழிலாளர்களைப் போலி அடையாளங்களின் கீழ் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த எச்சரிக்கையை விடுத்தன.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடைகளின் விதிமுறைகளின் கீழ் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், வட கொரியா நீண்ட காலமாக அவற்றுக்கான தனது உரிமையை வலியுறுத்தி வருகிறது. அது 2023-ல் தனது அரசியலமைப்பில் அணுசக்தி அந்தஸ்தை உறுதிசெய்தது.
அந்த நாடு தனது ஆயுதங்கள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக பல சர்வதேசத் தடைகளை எதிர்கொள்கிறது. அவற்றுக்கு நிதியளிப்பதற்காக, அது பரவலான இணையக் குற்றங்கள், கிரிப்டோகரன்சி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.




