இத்தாலி நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு விபத்து – 13 பேர் மாயம்
இத்தாலியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று துனிசியக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறைந்தத 13 துனியர்கள் காணாமல்போயுள்ளதுடன், இருவர் மட்டுமே மீட்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் அந்தப் படகு புறப்பட்டது என்று துனிசிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் முஸ்தபா அப்தெல்கெபிர் Mostafa Abdelkebir குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் உயிர் பிழைத்தவர்களில் இரண்டாவது நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்
ஒரு காலத்தில் மத்தியதரைக் கடலைக் கடக்கும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய புறப்பாட்டுத் தளமாக துனிசியா இருந்தது.
ஆனால், ஐரோப்பிய நிதியுதவி மற்றும் நவீன எல்லைக் கண்காணிப்பு உபகரணங்கள், குறிப்பாக இத்தாலியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மற்றும் இறுக்கமான கடல்சார் கட்டுப்பாடுகள் காரணமாக புலம்பெயர்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதற்கிடையே மனித உரிமைகள் கண்காணிப்பகம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஐரோப்பிய ஒன்றியம்-துனிசியா குடியேற்ற ஒப்பந்தம், துனிசியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான கடுமையான துஷ்பிரயோகங்களைத் தூண்டி, அவற்றை இயல்பாக்கியுள்ளது என்று கூறியுள்ளன.
அத்துடன் துனிசியப் பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்ட குடியேற்றம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அந்தக் குழுக்கள் வலியுறுத்தின.




