இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ‘டெங்கு’
இலங்கையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீவிரமாகப் பரவிவந்த டெங்கு நோயின் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
குறிப்பிட்ட அவ்விரு மாதங்களிலும் நாளொன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகிவந்த நிலையில், தற்போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,964 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோயாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், சுற்றாடல் தூய்மை தொடர்பான விழிப்புணர்வுகள் மற்றும் புகைமூட்டல் (Fogging) செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டமையினாலேயே இந்நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் தங்கள் சுற்றாடலைத் தொடர்ந்து சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தம் 93,381 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




