நீதி கோரி யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இதற்கமைய, யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதி அமைச்சர் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே, ஊடகவியலாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். ஊடக அமையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பிரதி அமைச்சரின் இந்த நிகழ்வைப் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.




