ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த ஈரானின் மூலோபாயத் திட்டத்திற்கு ஒப்புதல்
ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பதற்கான மூலோபாய நடவடிக்கை திட்டத்தின் பொதுவான கொள்கைகளுக்கு, ஈரானிய நாடாளுமன்றத்தின் கவுன்சில்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ‘தஸ்னீம்’ (Tasnim) செய்தி நிறுவனத்திடம் இக்குழுவின் செய்தித் தொடர்பாளர் Valiullah Bayati கருத்து வெளியிடுகையில்,
“ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான மூலோபாய நடவடிக்கை திட்டம் கவுன்சில் ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டது.
பல்வேறு கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், அதன் பொதுவான வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இத்திட்டத்தில் உள்ள தீர்மானங்களில் ஒன்று, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற “பகை நாடுகளுக்குச்” சொந்தமான கப்பல்கள் மற்றும் உபகரணங்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்குத் தடை விதிக்கிறது என்று அந்த செய்தி அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
“இந்த நாடுகள் நமது நாட்டிற்கு எதிராகப் பகைமை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஈரானிய மக்களுக்கு எதிராக அநீதியான மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்களைச் செய்வதற்கும் ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தியுள்ளன; இதன் காரணமாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று Valiullah Bayati சுட்டிக்காட்டியுள்ளார்.




