தற்கொலைப்படை ட்ரோன்களை தயாரிக்கும் இந்தியா
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, தற்கொலைப்படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
இதற்கான விலை மனு கோரலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
நிலையான இறக்கைகள் கொண்ட, ஒருமுறை மட்டுமே தாக்கக்கூடிய ஆளில்லா வான்வழி அமைப்புகள்தான தற்கொலைப்படை ட்ரோன்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படையின் 5-வது பேஸ் ரிப்பேர் டெப்போ (பிஆர்டி) ஒருங்கிணைக்கும் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பத் தேவைகளின்படி, இந்த ட்ரோன் 16,000 அடி உயரம் வரை பறந்து செயல்படும் திறன் கொண்டதாகவும், பகல் மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் இயங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்சம் 30 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் மேற்படி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு உதிரிபாகங்கள் மற்றும் அமைப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.





