அடுத்த மாதமும் வெப்ப அலை தொடரும் : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
வரலாறு காணாத வெப்ப அலையின் தாக்கத்தை இத்தாலியும் பால்கன் பகுதிகளும் இன்று உணர்ந்ததாக அறிவித்துள்ளன.
இந்த வெப்ப அலை நூற்றுக்கணக்கான கூடுதல் மரணங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு வாரத்திற்கும் மேலாக கண்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது.
இந்த வெப்ப அலையினால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அதேநேரம் இந்த பகுதிகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இத்தாலியில், வடக்கில் உள்ள போல்சானோ முதல் தெற்கில் உள்ள சிசிலி தீவு வரை 22 இடங்களுக்கு உயர்ந்தபட்ச வெப்பநிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குரோஷியாவில், தலைநகர் ஜாக்ரெப் Zagreb மற்றும் சுற்றுலாத் தலங்களான ஸ்ப்ளிட் Split , துப்ரோவ்னிக் Dubrovnikஉள்ளிட்ட பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ப்ளிட்டிலிருந்து சுமார் 34 மைல்கள் (55 கி.மீ) தென்மேற்கே உள்ள தீவு பகுதியில் உள்ள பைன் மரக் காட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு விமானங்களின் உதவியுடன் குறித்த தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஜூன் 20 அன்று தொடங்கிய இந்த வெப்ப அலை, ஐரோப்பாவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக மோசமானது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த கொளுத்தும் வெப்பம் மின் உற்பத்தியைத் தடைசெய்து, உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தி, சுகாதார அமைப்புகளை நிலைகுலையச் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் இல்லாமல் இந்த வெப்ப அலை சாத்தியமற்றது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த காலநிலை மாற்றத்தால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த வார இரவு நேர வெப்பநிலை உயர்வு 100 மடங்கு அதிகமாகியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் வரும் ஜுலை மாதத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





