ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதி உதவி
சமீபகாலமாக கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் இருந்து ஒரு பங்கை உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய €1.4 பில்லியன் நிதி உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அறிவித்தார்.
இந்த நிதியில் பெரும்பகுதி ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கடன்களைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படும், அதே நேரத்தில் €70 மில்லியன் இராணுவ உதவிக்கு ஒதுக்கப்படும்.
கீவ் மீதான ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த அழிவுகளுக்கு ரஷ்யாவே பொறுப்பேற்க வேண்டும் என உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.
2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய சிறிது காலத்திலேயே, ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகார வரம்பிற்குள் இருந்த ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கியது.
அந்த சொத்துக்கள் தொடப்படாமல் இருந்தாலும், அவற்றிலிருந்து கிடைத்த லாபம் உக்ரைனுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




