போர்த்துகலில் கொலை குற்றவாளியான பொலிஸ் அதிகாரிக்கு தண்டனையில் இருந்து விலக்கு?
போர்த்துக்கலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டபோதிலும், அவருக்கு சிறை தண்டனையில் இருந்து விலக்களிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2024-ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஒன்றை கட்டுப்படுத்தும் பணியில் இருந்தபோது புருனோ பின்டோ ( Bruno Pinto) என்ற அதிகாரி கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்த மோனிஸ் என்பரை சுட்டுக் கொன்றமைக்காகவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
வழக்கை விசாரணை செய்த போர்த்துகீசிய நீதிமன்றம் குறித்த அதிகாரியை இரண்டாம் நிலைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது. அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்தது.
மோனிஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சமயத்தில் அவரிடம் எந்த ஆயுதங்களும் இல்லை என்றும், அவர் நிராயுதபாணியாக இருந்ததாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் மோனிஸின் வாரிசுகளுக்கு €90,000 யூரோக்கள் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பொலிஸ் அதிகாரி தரப்பில் ஆஜரான சட்டதரணி தனது கட்சிக்காரர், மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போர்ச்சுகலில், குறிப்பாக ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக, காவல்துறையினரால் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துவது குறித்து ஐ.நா மனித உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாக கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




