துருக்கி, சவுதி, பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டணியில் இணைகிறது எகிப்து
துருக்கி , சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கையில் எகிப்தும் இணைவதற்குக் வாய்ப்புள்ளதாக துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் பிற நாடுகளின் இணைப்பிற்கும் திறந்தே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல் ஜசீரா அரபிக் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது,
‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை’ (Mecca Joint Defence Agreement) மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது வெளிப்புறத் தாக்குதல் நடத்தப்பட்டால், அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
“இந்த ஒப்பந்தம் உலகிற்கு ஒரு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளது” என்று கூறிய எர்டோகன், எதிர்கால விரிவாக்கத்திற்கான விருப்பங்களில் எகிப்தின் பங்கேற்பும் ஒன்று எனச் சுட்டிக்காட்டினார்.
‘மெக்கா ஒப்பந்தம்’ என்றும் அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் துருக்கி ஜனாதிபதி எர்டோகன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை புனித மெக்கா நகரில் கையெழுத்திட்டனர்.
இதில் கையெழுத்திட்டுள்ள மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்ற ‘கூட்டுத் தடுப்பு’ விதிமுறை இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை நேட்டோ (NATO) அமைப்பின் ‘பிரிவு 5’ உடன் ஆய்வாளர்கள் ஒப்பிடுகின்றனர். இருப்பினும், இதனை நேட்டோவிற்கு இணையான ஒன்றாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராக இயக்கப்பட்டதாகவோ கருதக்கூடாது என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பிராந்தியக் கவலைகள்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றங்கள் மற்றும் சிரியா, காசா, லெபனான் ஆகிய நாடுகளில் நடக்கும் போர்கள் குறித்தும் எர்டோகன் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது துருக்கியின் முன்னுரிமைப் பணியாகும் என்றும், அது தொடர்ந்து மூடப்பட்டிருப்பது எவரது நலனுக்கும் உகந்ததல்ல என்றும் அவர் கூறினார். மேலும், இப்பகுதியில் மோதல்களை நிறுத்த கத்தார் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.




