லாட்வியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோன் – நேட்டோ தீவிர கண்காணிப்பு
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான லாட்வியாவின் வான்வெளிக்குள் இன்று அதிகாலை ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.
நேட்டோவின் வான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானங்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
அந்த ட்ரோன் அல்லது அதன் தோற்றம் குறித்த விவரங்களை லாட்வியாவின் ஆயுதப் படைகள் உடனடியாக வெளியிடவில்லை.
அதேநேரம் ரஷ்யாவுக்கு அருகிலுள்ள பிராந்தியங்களுக்கான வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கையையும் ஆயுதப் படைகள் நீக்கியுள்ளன.
ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடான பின்லாந்து, ட்ரோன் ஊடுருவல் குறித்த சாத்தியமான முன்னெச்சரிக்கைகளை விடுத்திருந்தது
அதேநேரம் பின்லாந்து வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் விமான மற்றும் கடல்வழிப் போக்குவரத்திற்கான பகுதிகளைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியது.
இதேவேளை உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவில் படையெடுத்ததைத் தொடர்ந்து, மொஸ்கோவும் கீவ்வும் தொடர்ந்து தாக்குதல்களைப் பரிமாறி வருவதால், ரஷ்யா மற்றும் உக்ரைனின் அண்டை நாடுகள் அவ்வப்போது வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





