இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானங்களை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர்லைன்ஸ், இலங்கைக்கான தனது முதல் விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், விமானி மற்றும் துணை விமானி இருவரும் இலங்கையர்கள் ஆவர்.
வியட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் விமானமான VJ-1875, 169 பயணிகளுடன் நேற்று (18) இரவு 9.33 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர், அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திற்குப் புறப்பட்டது.
இந்த விமான நிறுவனம், வியட்நாமின் ஹோ சி மின் நகர விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே வாரத்தில் 3 நாட்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர்வணக்கத்துடன் விமானம் வரவேற்கப்பட்டது.
இந்நிகழ்வில், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு, சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர், விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் டபிள்யூ.எஸ். மங்கள, இலங்கைக்கான வியட்நாம் தூதர் திரி தி தாம் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




