நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்
நேபாள-திபெத் எல்லையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காலநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகளை உருகச் செய்து, பனிப்பாறை ஏரிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பனிப்பாறை சரிவுகளின் அபாயங்களை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவுகளே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பேரழிவில் சிக்கிய 389 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் 517 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட மேலும் 910 பேர் தொடர்பில்லாமல் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கில் வராத 100 சீனக் குடிமக்களும் நேபாளத்தில் காணாமல் போயுள்ளதாக பெய்ஜிங் கூறியுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டினரில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர், அதே நேரத்தில் 90 அமெரிக்கக் குடிமக்கள் தொடர்பில்லாமல் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தொடர்பில்லாமல் உள்ள மற்ற வெளிநாட்டினரில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் குடிமக்களும் அடங்குவர் என்று நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




