இலங்கையில் மிகப்பெரிய மனித புதைகுழியாக மாறிய செம்மணி
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது புதிதாக 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட, நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி புதைகுழி இன்று பதிவாகியுள்ளது.
இன்றைய அகழ்வாய்வின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 14 எலும்புத் தொகுதிகளில் மூன்று சிறுவர்களுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தகுந்த முறையில் சுத்தம் செய்யப்பட்டு, இலக்கமிடப்பட்டுள்ளன.
மேலும், இன்றைய தினம் ஒரு குழந்தை மற்றும் ஒரு சிறுவனுடையது உட்பட மொத்தம் 5 மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 380 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 362 எலும்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை மொத்தம் 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் அதிக எண்ணிக்கையிலான எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்ட வரிசையில், 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி இதுவரை இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 376 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மாத்தளை மனிதப் புதைகுழி மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது. அங்கிருந்து 155 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வாய்வு 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வாய்வு 45 நாட்களும், தற்போதைய மூன்றாம் கட்ட அகழ்வாய்வு 27 நாட்களும் என ஒட்டுமொத்தமாக இதுவரை 81 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




