நேபாளத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பேருதவியாக அமையும் ட்ரோன்கள்
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்க நேபாள ராணுவம் ட்ரோன்களைப் (ஆளில்லா விமானங்களை) பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நேபாள ராணுவத்தின் ஒப்பந்த ட்ரோன் விமானி சந்தோஷ் புததோகி Santosh Budhathoki, “எங்களின் பெரும்பாலான ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
உணவு, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளை அனுப்ப ட்ரோன்களைத் தவிர வேறு வழியில்லை. இதுவே சிறந்த வழியாகும், எனவே இதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
3 முதல் 4 கிலோமீட்டர் (2 முதல் 2.5 மைல்) தூரம் வரை இயக்கக்கூடிய இந்த ட்ரோன்கள், ஒரே நேரத்தில் 60 கிலோகிராம் (132 பவுண்ட்) வரை எடையுள்ள பொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
சீனா வழங்கிய சமீபத்திய உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகக் கிடைத்த நான்கு ‘DJI FlyCart 100’ ரக ட்ரோன்களைக் கொண்டு, ராணுவம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 16 முறை நிவாரணப் பொருட்களை விநியோகித்து வருகிறது.
நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்லவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் கண்காணிப்பு ட்ரோன்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.




