ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் காட்டுத்தீ அபாயம் – போராடும் தீயணைப்பு வீரர்கள்
ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் இன்றை தினம் சில பகுதிகளில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தீவிபத்து அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்டேவில் (Gironde) தீயணைப்பு வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்பிக்யூக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர்.
மேலும், பத்தில் ஒன்பது காட்டுத்தீகள், தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ, மனித நடவடிக்கைகளின் விளைவாகவே தொடங்குகின்றன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஸ்பெயின் ஏற்கனவே 22 பெரிய காட்டுத்தீ சம்பவங்களைச் சந்தித்துள்ளதாகவும், நாடு முழுவதும் 100,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மேற்கு பால்கன் பகுதியில், வெப்ப அலைகளிலிருந்து ஆலங்கட்டி மழைக்கு அபாயம் மாறியுள்ளது. வடக்கு மாசிடோனியா மற்றும் கிழக்கு கொசோவோவில் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




