பிரதமருக்கு அடுத்தப்படியாக பாதுகாப்பு பிரதானி: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்
27-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் மிக மூத்த இராணுவப் பதவியின் அதிகாரங்களை முதன்முறையாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்துக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20 அன்று, பாகிஸ்தான் தேசிய பேரவை ‘பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் சட்டம் 2026’ மற்றும் ‘தேசிய கட்டளை அதிகாரி சட்டம் 2010’-க்கான திருத்தம் ஆகியவற்றை அங்கீகரித்தது.
இவ்விரு சட்டங்களும் இணைந்து, கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட ‘பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பொறுப்பு’ (Chief of Defence Forces – CDF) என்ற பதவிக்கு சட்டப்பூர்வ வடிவத்தை வழங்குகின்றன.
தேசிய பேரவையின் முதன்மை நிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த சட்டமூலங்களுக்கு, அன்று காலையிலேயே அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுடன், அடுத்த சில மணி நேரங்களிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
வரலாற்றுச் சீர்திருத்தம்
கடந்த 2025 மே மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட நான்கு நாள் மோதலுக்குப் பிறகு இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
1976-ஆம் ஆண்டு முப்படைகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட ‘கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர்’ (CJCSC) பதவிக்கு பிறகு, பாகிஸ்தான் இராணுவ உயர் கட்டளை அமைப்பில் செய்யப்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம் இதுவென பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்தப் பழைய பதவி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ‘பாதுகாப்புப் படைகளின் தலைமையகம்’ (DFHQ) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக, தற்போது இராணுவத் தளபதியாகவும் சேவையாற்றும் ‘பீல்ட் மார்ஷல்’ ஆசிம் முனீர் (Field Marshal Asim Munir) நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
புதிய சட்டத்தின்படி, ‘பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பொறுப்பில்’ (CDF) உள்ளவருக்கு முப்படைகளின் மீதும் நேரடி ‘செயல்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் கட்டளை அதிகாரி’ (Operational command and control) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இராணுவ நடவடிக்கை சார்ந்த விவகாரங்களில் முப்படைகளுக்கும் இவர் மட்டுமே கூட்டாட்சி அரசாங்கத்திற்குப் பொறுப்பானவராவார்.
முன்னர் இருந்த ஒருங்கிணைப்புப் பதவி பெரும்பாலும் ஒரு சடங்குபூர்வமான பதவியாகவே இருந்தது என்றும், தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் முப்படைகள் மீதும் உண்மையான அதிகாரம் கொண்ட அதிகாரியாக மாறியுள்ளார் என்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் சட்ட வல்லுநர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.




