மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் இந்திய தூதுவர்
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மரியாதை செலுத்தியதாகவும், அவர்களின் ஆசிகளைப் பெற்றதாகவும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கூறியுள்ளார்.

டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும், அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு விளக்கியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படும், திட்டமிடப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இந்தியத் தூதுவர் ஜா குறிப்பிட்டுள்ளார்.




