பொருளாதார பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் அமெரிக்கா – ஈரான் கண்டனம்
ஈரானுக்கு எதிராக “வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை” அமெரிக்கா தயாரித்து வருவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent தெரிவித்துள்ளார்.
பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது, ஈரானுக்கு எதிரான மேலும் பெரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கக்கூடும் என்று பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “பொருளாதாரப் போர்” தொடுப்பதாக அச்சுறுத்தி, தெஹ்ரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தனிமைப்படுத்தலை உறுதியளித்ததைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் மூன்று வாரங்களுக்கும் மேலாக இல்லாத உச்சத்தை எட்டியுள்ளன.
இதற்கிடையில் அமெரிக்கத் தடைகளை ‘பொருளாதாரப் பயங்கரவாதம்’ என ஈரான் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்பட்ட தடைகளை ஈரான் கண்டித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை “பொருளாதாரப் பயங்கரவாதம்” என்றும், அவை சாதாரண ஈரானியர்களைப் பாதிக்கும் என்றும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு ஒப்பானவை என்றும் விவரித்துள்ளது.




