நிதிப் பற்றாக்குறை – பாலஸ்தீன அகதிகளின் வாழ்க்கை ஆபத்தில்
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையான UNRWA-வின் 100 மில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு உலக நாடுகளுக்கு, ஐ. நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த நிதிப் பற்றாக்குறை காரணமாக மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நன்கொடையாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஐநா செயலாளர் ,
” பெரும் நிதிப் பற்றாக்குறை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இந்த முகமையின் பணிகளுக்கு இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, UNRWA-வின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.” என தெரிவித்தார்.
” நாம் இன்று இங்கு கூடியிருக்கும் வேளையில், மில்லியன் கணக்கான பாலஸ்தீன அகதிகளின் பாதுகாப்பும் நலனும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி முழுவதும் UNRWA கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது.
அத்துடன் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை இப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள அதன் பணிகளைப் பெரிதும் அச்சுறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது தங்களின் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு உதவுவதற்காக, 1949 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபையால் (UNGA) UNRWA உருவாக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள போதிய நிதிப் பற்றாக்குறை காரணமாக, இந்த முகமை தனது செயல்பாடுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
UNRWA-விற்கான நிதி மேலும் குறைக்கப்பட்டால், அது “நிலைமைகளைத் தாங்க முடியாத அளவிற்கு மோசமாக்கிவிடும்” என்று பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.
காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம், லெபனான், ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் UNRWA இயங்கி வருகிறது. இது 2.6 மில்லியன் பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம், கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி வருகிறது.
அமெரிக்கா தான் UNRWA-வின் மிகப்பெரிய நன்கொடையாளராக இருந்தது.
ஆனால், 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூரமான தாக்குதலில் UNRWA ஊழியர்கள் சிலர் ஈடுபட்டதாக இஸ்ரேல் எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியதை அடுத்து, 2024 ஜனவரியில் அமெரிக்கா தனது நிதியுதவியை நிறுத்தியது.




