புகலிடம் பெற ஓரினச் சேர்க்கையாளர்களாக நடிப்பு – இருவர் கைது
புகலிடம் பெறும் நோக்கில் தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என உருவகப்படுத்திக்கொள்ள உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு ஆலோசகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சோதனைகளை, உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு அமுலாக்கக் குழுவின் குற்றவியல் மற்றும் நிதி புலனாய்வு பிரிவு முன்னெடுத்தது.
விசா காலம் நிறைவடையும் நிலையில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு, புகலிட மனுக்களுக்கு ஆதரவாக போலியான கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கடந்த மாதம் பிபிசியின் இரகசிய விசாரணையில் வெளிக்கொணரப்பட்டது.
இந்த விசாரணை, புகலிட கோருவோருக்கான நிகழ்வொன்றில் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டது. இதன்போது அங்கு கலந்து கொண்டவர்களில் பலர் உண்மையான ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்ல என ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உள்துறை அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியது. அதன் அடிப்படையில், குடிவரவு சட்டத்தை மீறி சேவைகள் வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் 40 களின் இறுதியில் உள்ள ஒரு பெண்ணும், மோசடி குற்றச்சாட்டில் 20 களின் தொடக்கத்தில் உள்ள ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய செயல்கள் உண்மையில் துன்புறுத்தலிலிருந்து தப்பி வரும் புகலிட கோருவோரின் உரிமைகளை பாதிக்கக்கூடியவை என்று அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் வேறுபட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன. சிலர் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்த, மற்றவர்கள் சமநிலையான மற்றும் நியாயமான புகலிட அமைப்பு அவசியம் எனக் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம், புகலிட அமைப்பின் தவறான பயன்படுத்தல் மற்றும் அதன் மீதான கட்டுப்பாடுகள் குறித்து மீண்டும் தீவிரமான விவாதத்தை எழுப்பியுள்ளது.




