பரம எதிரியை சந்திக்கும் ட்ரம்ப் : தைவான் விடுத்துள்ள எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சீனாவிற்கு பயணிக்கவுள்ளார்.
இந்த விஜயத்தன்போது தைவான் விவகாரத்தில் சீனா சில “தந்திரமான நகர்வுகளை” செய்ய முயற்சிக்கக்கூடும் என்று தைவானின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தைபேயில் உள்ள நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்புப் பணியகத்தின் தலைமை இயக்குநர் சாய் மிங்-யென் (Tsai Ming-yen ), ட்ரம்ப் மற்றும் ஷி இடையேயான உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம், “அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இல்லாமல்”, அவர்களின் பிரச்சினைகளை நிர்வகிப்பதாகவே இருக்கக்கூடும் என்று கூறினார்.
“தைவான் பிரச்சினையைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தைகளின் போது சீன கம்யூனிஸ்டுகள் சில தந்திரங்களைக் கையாள முயற்சிக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் மே 14 முதல் 16 வரை பெய்ஜிங்கில் இருப்பார். அங்கு, அரிய கனிமங்கள் மீதான சீனாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், பகுதி வரி நிவாரணத்திற்கான விவசாயப் பொருட்கள் ஒப்பந்தம், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் மற்றும் இரு நாடுகளின் உறவுகளில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் பொருளாதார போர் அதிகரித்திருந்ததை தொடர்ந்து இந்த விஜயம் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது வர்த்தகப் எதிரியுடன் உறவுகளைச் சீர்செய்ய வொஷிங்டன் மேற்கொள்ளும் முயற்சி இது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.




