மஹாராஷ்டிராவில் சோகம் – ஒரு ஐபோனுக்காக குடும்பமே உயிரிழப்பு
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஐபோன் ஒன்றுக்காக குடும்பமே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதுடைய இளைஞர் ஒருவர் மாதாந்திர தவணையில் ஐபோன் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். இருப்பினும் அவரால் உரிய தொகையை செலுத்த முடியாமல்போயுள்ளது.
இதன் காரணமாக தனது தந்தையிடம் பணம் கோரி சண்டையிட்டுள்ளார். இருப்பினும் பெற்றோர் அந்த தொகையை கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் மலை மீது ஏறியுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற பெற்றோர் இளைஞரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர முயன்றுள்ளனர்.
மலையின் விளிம்பில் நின்றிருந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழ அவரை காப்பாற்ற முற்பட்ட தந்தையும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனை அவதானித்த தாயும் பின்னர் மலையுச்சியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள், ஜல்தா ஃபாட்டா பகுதியைச் சேர்ந்த குணால் சந்த்குடே (18), அவரது தந்தை முரளிதர் சந்த்குடே (48) மற்றும் அவரது தாய் சங்கீதா சந்த்குடே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




