22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு 22 இல் அறிவிப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவார் என அறியமுடிகிறது.
சட்டமூலங்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் (பொருட்கோடல்) சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றம் கூடும் வேளையில், சபாநாயகர் தனது அறிவிப்பின்போது மேற்படி தீர்ப்பை வெளிப்படுத்துவது வழமையாகும்.
இதற்கமைய, 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றும், அந்தத் தீர்ப்பை 22 ஆம் திகதி அவர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடிப்படையாகக்கொண்டே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தையும் வாக்கெடுப்பையும் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது.
அத்துடன், 22 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வின்போது, தமது கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பிலேயே இருக்குமாறு தேசிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.
22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எதிரணி சர்வஜன வாக்கெடுப்பை கோரி இருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளில் கைவைக்க வில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.




