ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தில் உலக நாடுகளுடன் கைக்கோர்த்த இலங்கை
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை அனுசரிப்பதில் இலங்கையும் உலக நாடுகளுடன் இணைந்துள்ளது.
ஆட்கடத்தலின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், வலுவான பொது விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் , பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரும், தேசிய ஆட்கடத்தல் தடுப்புப் பணிப்படையின் தலைவருமான ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (Sampath Thuyacontha) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஆட்கடத்தல் என்பது எல்லைகளைக் கடந்து, சமூகங்களுக்குள், பணியிடங்கள், இணையதளங்கள் வழியாக, மற்றும் முறையான வேலை வாய்ப்புகள் என்ற போர்வையிலும் கூட நிகழக்கூடிய ஒரு குற்றமாகும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருளான “மோசடிக்குப் பின்னால் சிக்கியவர்கள்” என்பதைக் குறிப்பிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மக்களை அதிகளவில் கவர்ந்திழுத்து, அவர்களை அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் சுரண்டலுக்கு உள்ளாக்கி, இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்துகின்றன என்று கூறினார்.
இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபடுவது போல் தோன்றும் நபர்கள், சில சமயங்களில், கடத்தல் குழுக்களால் தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு சுரண்டப்பட்ட பின்னர், நிர்ப்பந்தத்தின் கீழ் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனிதக் கடத்தலைத் தடுத்தல், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு பாதுகாத்தல், விசாரணைகளையும் வழக்குத் தொடர்வுகளையும் வலுப்படுத்துதல், மற்றும் தப்பிப் பிழைத்தவர்கள் நீண்ட காலத்திற்கு சமூகத்தில் மீண்டும் இணைவதற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் தேசிய மனிதக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு உறுதியாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்த.
அத்துடன் மனிதக் கடத்தலைக் கையாள்வது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்று வலியுறுத்திள அவர், இக்குற்றத்தை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.




