செம்மணி புதைகுழி: ஐ.நா. விசாரணைகோரி யாழில் பேரணி
யாழ். செம்மணி மனிதப் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகின்றது.
அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமானது என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தப் பேரணியும் அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ளன.
நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி, கிட்டு பூங்கா பகுதியைச் சென்றடைந்து நிறைவடைந்ததுடன், அங்கு விசேட பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
இந்தப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட பல முக்கிய கட்சிப் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




