வருடாந்தம் 3 மில்லியன் டொலர் சேமிப்பு: இலங்கையில் பிரமாண்ட திட்டம் ஆரம்பம்
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.
10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யப்படும்.
இதன் மூலம் ஆண்டுதோறும் காபனீரொக்சைட் (CO2) வெளியேற்றத்தை சுமார் 6,440 மெட்ரிக் தொண்களினால் குறைத்துக் கொள்ள முடிவதுடன், ஆண்டுதோறும் டீசல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் 2.5 மில்லியன் லீற்றர் எரிபொருளும் மிச்சப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டுதோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்கு மீதப்படுத்தப்படுகிறது.
உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் முழுமையான பங்களிப்புடன் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு நிர்மாணப் பணிகளின் போது இப்பிரதேச மக்களில் சுமார் 150 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, தம்புள்ளை, இப்பன்கடுவ சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் பல சமூகநலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதோடு, ஜனாதிபதி அடையாள ரீதியாக இந்நிகழ்விலும் கலந்துகொண்டார்.




