இலங்கையில் புதிய கடற்படைத் தளபதி நியமனம்
இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
இந்த நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பானகொட ஜூலை முதலாம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.
வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற டேமியன் பெர்னாண்டோ, 1991 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் 21வது ஆட்சேர்ப்பின் கீழ் நிறைவேற்று பிரிவின் கெடெட் அதிகாரியாக இணைந்துகொண்டார்.
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது அடிப்படை கடற்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், 1993 இல் சப்-லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
35 வருட கால தனது சிறப்பான கடற்படை சேவையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தொழில்முறை மற்றும் விசேட பயிற்சி நெறிகளை வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பூர்த்தி செய்துள்ளார்.
அவர் ரணசூர, உத்தம சேவா ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன், அவரது தொழில்முறைத் திறன், செயல்திறன் மற்றும் அரிய சேவைப் பங்களிப்பைப் பாராட்டி, ஆறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படைத் தளபதிகளினால் பாராட்டுப் பத்திரங்களும் (Letters of Commendation) வழங்கப்பட்டுள்ளன.
டேமியன் பெர்னாண்டோ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முதுமாணிப்(Master of Defence Studies) பட்டத்தையும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான முதுமாணிப் (Master of Arts in International Security and Strategy) பட்டத்தையும் பெற்றுள்ளார்.





